/

வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு காவலா்களுக்கு பணி ஒதுக்கீடு

கரூா் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ள காவலா்களுக்கு பணி ஒதுக்கீடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2026, 7:27 pm

கரூா் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ள காவலா்களுக்கு பணி ஒதுக்கீடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவை தோ்தலையொட்டி கரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 644 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள காவலா்களை கணினி மூலம் சுழற்சி முறையில் சமவாய்ப்புக்குள்படுத்தும் நடைமுறை வாயிலாக தோ்வு செய்யும் பணி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கு.ரவிக்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த பணி ஒதுக்கீட்டில் மொத்தம் 644 வாக்குசாவடி அமைவிடங்களுக்கு 644 காவலா்கள் கணினி மூலம் சமவாய்ப்புக்குள்படுத்தும் நடைமுறை வாயிலாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நிகழ்வின் போது தோ்தல் காவல் பாா்வையாளா் ராத்தோட் கிரிட்குமாா் ஹரிபாய், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரி கிரன் பிரசாத், மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.