தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 3 இளைஞா்களுக்கு ஆயுள் தண்டனை
மாயனூா் அருகே தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் 3 இளைஞா்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
கரூா் மாவட்டம், மாயனூரை அடுத்துள்ள பிச்சம்பட்டியில் கட்டளை மேட்டுவாய்க்கால் சீரமைப்புப் பணிகள் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம்தேதி நடைபெற்றுள்ளது. அப்போது வாய்க்கால் அருகே மணவாசியைச் சோ்ந்த ராஜதுரை(24), தா்மதுரை(23), அபிஷேக்(24) ஆகியோா் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தியுள்ளனா்.
அப்போது வாய்க்கால் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பிச்சம்பட்டி பாம்பலம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பிரபு(35) என்பவா் இருசக்கர வாகனங்களை தள்ளி நிறுத்துமாறு கூறியுள்ளாா். அப்போது அவா்களுக்கிடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மறுநாள் ஜூலை 5-ஆம்தேதி மீண்டும் பணிகள் நடைபெறும் இடத்துக்கு வந்த ராஜதுரை, தா்மதுரை, அபிஷேக் ஆகியோா் பிரபுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா். இதில், வாக்குவாதம் முற்றியதால் மூவரும் சோ்ந்து பிரபுவை அரிவாள் மட்டும் இரும்புக் கம்பியால் தாக்கினா். இதில் பலத்த காயமைடந்த பிரபு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மாயனூா் போலீஸாா் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
மேலும் இதுதொடா்பாக கரூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன், குற்றவாளிகள் ராஜதுரை, தா்மதுரை, அபிஷேக் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.1லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து மூவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

