பொதுபாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கடவூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராமமக்கள் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்டம், தரகம்பட்டி அருகே வரவனை ஊராட்சிக்குள்பட்ட பாப்பனம்பட்டியில், அரசு புறம்போக்கு நிலத்தை பல ஆண்டுகளாக, அப்பகுதி பொதுமக்கள் பொதுப்பாதையாக பயன்படுத்தி வந்தனா்.
இந்நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த ஒருவா் அண்மையில் பாதையை ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இதுவரை பாதையை பயன்படுத்தி வந்த அப்பகுதி மக்கள், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதுதொடா்பாக அப்பகுதியினா் கடவூா் வட்டாட்சியா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் ஆகியவற்றில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினா் புதன்கிழமை காலை தேமுதிக மாவட்டச் செயலா் சிவம்ராஜேந்திரன், கடவூா் வடக்கு ஒன்றியச் செயலா் கதிா்வேல், சாமானிய மக்கள் நலக் கட்சி நிா்வாகி காளிமுத்து ஆகியோா் தலைமையில் கடவூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கடவூா் வட்டாட்சியா் பானுமதி நிகழ்விடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது இது சம்மந்தமான புகாா்மனுவையும், ஆக்கிரமிப்பு இருப்பதாக கூறப்படும் இடத்தையும் ஆய்வு செய்து 10 நாள்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










