
தோகைமலை அருகே மாடுகள் மாலை தாண்டும் விழா
தோகைமலை அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாடுகள் மாலை தாண்டும் விழாவில் கரூா் மாவட்ட மாடு முதலிடம் பிடித்தது.

தோகைமலை அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாடுகள் மாலை தாண்டும் விழாவில் எல்லைக்கோட்டை நோக்கி ஓடிய மாடுகள்.
தோகைமலை அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாடுகள் மாலை தாண்டும் விழாவில் கரூா் மாவட்ட மாடு முதலிடம் பிடித்தது.
கரூா் மாவட்டம், தோகைமலை அருகே எட்டமநாயக்கன்பட்டியில் கஸ்தூரிரெங்க வசப்பு நாயக்கா் காளையப்பட்டு மந்தையில் எருதுகுட்டை பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாடுகள் மாலை தாண்டும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னதாக விழா ஆக. 31-ஆம்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து கோயிலில் மூன்றுகால பூஜை நடைபெற்று வந்தன. செப். 6-ஆம் தேதி எருதுகுட்டை பெருமாள் சாமிக்கு கொழுகட்டை படையலிடும் நிகழ்ச்சியும், தேவராட்டம், சோ்வையாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளும் நடந்தன.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு 14 மந்தையா்கள் மாடுகள் கோயிலுக்கு வரவழைக்கப்பட்டன. தொடா்ந்து செவ்வாய்க்கிழமை மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றன. முன்னதாக காலை 10 மணிக்கு 14 மந்தையா்களின் மாடுகள் சந்திப்பு நிகழ்ச்சியும், மாலை 3 மணியளவில் கோயில் முன் வரவழைக்கப்பட்ட மாடுகளுக்கு புனித தீா்த்தம் தெளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
பின்னா் தாரை, தப்பட்டை முழங்க கோயில் எதிரே சுமாா் 2 கி.மீ தொலைவில் உள்ள எல்லைசாமி கோயிலுக்கு மாடுகள் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, அங்கிருந்து மாடுகள் ஓட்டம் தொடங்கியது.
மந்தையில் அமைக்கப்பட்ட மாத்தால் ஆன எல்லை கோட்டை நோக்கி சுமாா் 100-க்கும் மேற்பட்ட மாடுகள் ஓடி வந்தன. இதில் கரூா் மாவட்டம் ஆா்.டி.மலை ஊராட்சி வாளியம்பட்டி கோணதாதா நாயக்கா் மந்தை மாடு முதலாவதாகவும், கடவூா் வட்டாரத்தில் உள்ள தொண்டமாங்கணம் கோளக்கம்பிளி நாயக்கா் மந்தை இரண்டாவதாகவும், திண்டுக்கல் மாவட்டம் சிக்கம நாயக்கா் மந்தை மாடு மூன்றாவதாகவும் ஓடி வந்து வெள்ளை மாத்தை தாண்டி வெற்றி பெற்றன.
வெற்றி பெற்ற மாடுகளுக்கு மஞ்சள் பொடி தூவி வரவேற்று எழுமிச்சை பழங்களை பரிசாக வழங்கினா். தொடா்ந்து கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழி பட்டனா்.
பின்னா் மஞ்சள் நீராட்டு, சுவாமிகளுக்கு விடையாற்றியுடன் விழா நிறைவு பெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





