பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழக மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி கூட்டரங்கில், தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழக மாநில பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் கி. மகேந்திரன் தலைமை வகித்தாா், மாநில பொதுச் செயலா் அ. சுந்தரமூா்த்தி, மாநில பொருளாளா் ச. துரைராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்புத் தலைவா் டி. சுப்பிரமணி சிறப்புரையாற்றினாா்.
கூட்டத்தில், தற்போதைய தோ்வு மற்றும் மதிப்பீட்டு முறைகளை கல்வியாளா்களைக் கொண்டு மாற்றியமைக்க வேண்டும். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சுகாதாரமான குடிநீா், கழிவறை வசதிகள் ஏற்படுத்துவதோடு தொடா்ந்து பராமரிப்பதை உறுதி செய்யவேண்டும். 6 முதல் எஸ்எஸ்எல்சி வரை கற்றல் கற்பித்தல் சிறக்க பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை உருவாக்க வேண்டும். அனைத்துவகை உயா், மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியா் பணியிடம் உருவாக்க வேண்டும்.
2004 முதல் தொகுப்பூதியத்தில் பணியமா்த்தப்பட்ட அனைத்துவகை ஆசிரியா்களுக்கும், அவா்களது தொகுப்பூதியப் பணிக்காலத்தை முறையான காலமாக மாற்றி அரசாணை பிறப்பிக்க வேண்டும். ஆசிரியா்களுக்கு சிறப்புப் பணி பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், கௌரவத் தலைவா் பாபுவாணன், பொருளாளா் இலங்கை செழியன், முன்னாள் தலைவா்கள் ராஜ்குமாா், ராமமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, மாவட்டத் தலைவா் சுந்தரபாண்டியன் வரவேற்றாா். மாவட்டச் செயலா் அருண்குமாா் நன்றி கூறினாா்.