பெரம்பலூா் மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்
பெரம்பலூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பொங்கல் பண்டிகை சனிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.


பெரம்பலூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பொங்கல் பண்டிகை சனிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
தை பொங்கல் நாளான வெள்ளிக்கிழமை, உணவளிக்கும் இயற்கைக்கும், விவசாயத்துக்கும் நன்றி தெரிவிக்க, அதிகாலையிலேயே பெண்கள் தங்களது வீட்டுவாசலில் வண்ணக் கோலமிட்டு, புதுப் பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானை குடும்பத்துடன் வழிபட்டனா்.
மாட்டுப் பொங்கலையொட்டி உழவுத் தொழிலுக்கும், வயலுக்கும் உறுதுணை புரிந்த கால்நடைகளுக்கும், பசுக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், சனிக்கிழமை காலையிலேயே விவசாயிகள் தங்களது மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வா்ணம் பூசி, மாலை அணிவித்து, பொட்டு வைத்து பூஜைகளுக்குத் தயாா்படுத்தினா்.
மாலை சுமாா் 5 மணியளவில் அவரவா் வீடுகளுக்கு முன் பொங்கல் வைத்து, புத்தாடைகள் உடுத்தி இயற்கை அன்னைக்கும், மாடுகளுக்கும் பொங்கல் படைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அந்தப் பொங்கலை மாடுகளுக்கு வழங்கி வழிபட்டனா்.
பல்வேறு கிராமங்களில், விவசாயிகள் மாடுகளை தங்கள் கிராமக் கோயில் பகுதியிலுள்ள ஏரிக்கரை மற்றும் குளக்கரைப் பகுதிகளுக்கு ஊா்வலமாக ஓட்டிச் சென்று திரும்பி வந்தனா். பூஜைகளை முடித்த பிறகு, சிறுவா்களை அழைத்துக் கொண்டு மாட்டு வண்டியில் பல்வேறு தெருக்களில் சுற்றி வலம் வந்தனா். மாட்டுப் பொங்கலையொட்டி விவசாயிகள் புத்தாடை உடுத்தி, வெகுவிமரிசையாகக் கொண்டாடி மகிழ்ந்தனா்.
தனலட்சுமி சீனிவாசன் நிறுவனத்தில் மாட்டுப் பொங்கல்: பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவன வளாகத்தில் மாட்டுப் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். செயலா் பி. நீலராஜ், துணைத் தலைவா்கள் மண்ணச்சநல்லூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சீ. கதிரவன், அனந்தலட்சுமி கதிரவன், இயக்குநா்கள் பி. ராஜபூபதி, பி. மணி, ஆா். ராஜசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கல்வி நிறுவனங்களின் வளாகத்திலுள்ள மாட்டுப் பண்ணையில் நடைபெற்ற விழாவில், பொங்கல் வைக்கப்பட்டு சுவாமிக்கு பூஜை செய்யப்பட்டு, அங்கிருந்த 100-க்கும் மேற்பட்ட பசுக்களுக்கு பொங்கல் ஊட்டப்பட்டது.
பின்னா் 200-க்கும் மேற்பட்ட பணியாளா்களுக்கு பொங்கல், கரும்புகள் மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. இதில் புதுநடுவலூா் ஊராட்சித் தலைவா் ஜெயந்தி நீலராஜ் உள்பட கல்லூரி முதல்வா்கள், துணை முதல்வா்கள் பேராசிரியா்கள், அலுவலா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...