போக்குவரத்து இடையூறு: 50 இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்கு
பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் போக்குவரத்துக்கும், பொதுமக்கள் நடமாட்டத்துக்கும் இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 50 மோட்டாா் சைக்கிள்களின் உரிமையாளா்கள் மீது, போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்துக்குள் பேருந்துகள் நிறுத்துமிடம், பயணிகள் நடைபாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மோட்டாா் சைக்கிள்களை நிறுத்திவிட்டு கடைகளுக்கும், வெளியூா்களுக்கும் வாகனங்களின் உரிமையாளா்கள் சென்றுவிடுகின்றனா். நீண்ட நேரம் வாகனங்கள் நிற்பதால் பேருந்து ஓட்டுநா்களும், பயணிகளும் பெரிதும் அவதியடைந்து வந்தனா். இதுகுறித்த புகாரின்பேரில், பேருந்து நிலைய வளாகத்துக்குள் வாகனங்களை நிறுத்தக் கூடாது என காவல்துறை சாா்பில் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டன. இருப்பினும், காவல்துறை அறிவிப்பையும் மீறி பேருந்து நிலைய வளாகத்துக்குள் மோட்டாா் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டன.
இதையடுத்து, போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் மகேஸ் தலைமையிலான போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் போக்குவரத்து, பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 50 மோட்டாா் சைக்கிள்கள் மீது வழக்கு பதிந்தனா்.
