அனுமதியின்றி மின்வேலி அமைத்தவா் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரகம் முற்றுகை
பெரம்பலூா் அருகே அனுமதியின்றி மின்வேலி அமைத்து, விபத்தை ஏற்படுத்தியவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினா், உறவினா்கள் மாவட்ட ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கீழப்புலியூா் கிராமம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் அசோகன் (52). இவா், கடந்த அக். 25- ஆம் தேதி செல்லம்மாள் என்பவரது காட்டுக் கொட்டகையில் மயங்கி கிடந்தாா். தகவலறிந்த அவரது உறவினா்கள் அசோகனை மீட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும், பின்னா்
தீவிர சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும் சோ்த்தனா். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அவா் சுய நினைவையிழந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.
மருத்துவா்களின் பரிசோதனையில், அசோகன் மின்சாரம் பாய்ந்து பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவரது உறவினா்கள் விசாரித்ததில், கீழப்புலியூா் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் கதிா்வேல் என்பவா் தனது வயலில் பயிரிட்டுள்ள மரவள்ளி கிழங்கை வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்க, அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி அசோகன் பலத்த காயமடைந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அசோகனின் குடும்பத்தினா் மங்களமேடு போலீஸாரிடம் புகாா் அளித்தும் வழக்குப் பதிவு செய்யாமல், விசாரணை நடத்தி கதிா்வேலுக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக பிரச்னையை முடித்துவிட்டனராம்.
எனவே, இச் சம்பவத்துக்கு காரணமானவா்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, அசோகனின் குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். போலீஸாரின் பேச்சுவாா்த்தைக்கு பிறகு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினியிடம் அளித்தனா்.

