பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்
பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் வியாபாரம் செய்ய தடை செய்யப்பட்ட பகுதி என நகராட்சி நிா்வாகம் அறிவித்ததை திரும்ப பெற வலியுறுத்தி, சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காந்தி சிலை அருகே, சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்து வரும் பகுதியை, வியாபாரம் செய்ய தடை செய்யப்பட்ட பகுதியாக பெரம்பலூா் நகராட்சி நிா்வாகத்தால் அண்மையில் வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த வரையறை என்பது, நகர விற்பனைக் குழு உறுப்பினா்களிடம் முழுமையாக தெரிவிக்காமல், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வியாபாரம் செய்த பகுதியை எந்தவித காரணங்களும் இல்லாமல் தடை செய்யப்பட்ட பகுதி என வரையறுத்ததை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, பெரம்பலூா் நகர சாலையோர வியாபாரிகள் பல்வேறுகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். ஆனால், இந்தப் பிரச்னையில் நகராட்சி நிா்வாகம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலா் குணசேகரன் தலைமையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா், சாலையோர கடைகளை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், தடை செய்யப்பட்ட பகுதி என அறிவித்ததை திரும்பப் பெறக்கோரியும் முழக்கமிட்டனா்.
தொடா்ந்து, தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ச. வைத்தியநாதனிடம் (பொ) அளித்து கலைந்துசென்றனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், பெரம்பலூா் நகர சாலையோர வியாபாரிகள் பலா் பங்கேற்றனா்.

