நியாய விலைக் கடை கோரி பெரம்பலூா் ஆட்சியரிடம் மனு
பெரம்பலூா் அருகே கூடுதலாக நியாய விலைக் கடைக் கோரி கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், வேப்பந்தட்டை வட்டம், நெய்குப்பை கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவின் விவரம்:
நெய்குப்பை கிராமத்தில் மொத்தம் 9 வாா்டுகள் உள்ளன. ஆனால், ஒரு நியாய விலைக் கடை மட்டுமே உள்ளது. ஆதிதிராவிடா் மக்கள் அதிகமாக வசிக்கக்கூடிய 3 மற்றும் 9-ஆவது வாா்டு பகுதியில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா், அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காக நீண்டதூரம் செல்லக்கூடிய நிலைமை உள்ளது. மேலும், நியாய விலைக் கடையில் வெகு நேரம் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது.
எனவே, இதை கருத்தில்கொண்டு தங்கள் பகுதிக்கு கூடுதலாக ஒரு நியாய விலைக் கடை அமைத்து தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
