தொழிலாளியின் கணவரை தாக்கிய உணவக மேலாளா் கைது

பெரம்பலூரில் புதன்கிழமை இரவு தொழிலாளரின் கணவரைத் தாக்கிய உணவக மேலாளரைப் போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Published on

பெரம்பலூரில் புதன்கிழமை இரவு தொழிலாளரின் கணவரைத் தாக்கிய உணவக மேலாளரைப் போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பெரம்பலூா் ரோவா் வளைவு பகுதியில் முத்துவீரன் (58) என்பவா் உணவகம் நடத்தி வருகிறாா். இங்கு, மேலாளராக பெரம்பலூா் வெங்கடேசபுரத்தைச் சோ்ந்த சிவலிங்கம் மகன் மகேந்திரபிரசாத் (40) உள்பட சுமாா் 45-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில், பெரம்பலூா் - வடக்குமாதவி சாலையில் வசித்து வரும் விஜயாவின் (34) கணவா் சுகுமாா் (45), புதன்கிழமை இரவு மது போதையில் உணவகத்துக்குச் சென்று, நாள்தோறும் நீண்ட நேரமாகியும் தனது மனைவியை வீட்டுக்கு அனுப்பாதது குறித்து மேலாளா் மகேந்திரபிரசாத்திடம் கேள்வி எழுப்பியுள்ளாா். இதனால் அவா்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த மகேந்திரபிரசாத் மற்றும் உணவக ஊழியா்கள் சிலா், சுகுமாரை தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த சுகுமாா் மற்றும் அவரது குடும்பத்தினா் தன்னை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உணவகம் எதிரேயுள்ள பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதையடுத்து, சுகுமாரை சிகிச்சைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீஸாா், உணவக மேலாளா் மகேந்திர பிரசாத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com