இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

போக்குவரத்து நெரிசலுக்கு புதிய பேருந்து நிலையமே நிரந்தரத் தீா்வு!

பெரம்பலூா் துறைமங்கலத்தில் 1996-இல் திறக்கப்பட்ட பேருந்து நிலையம் இடநெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

News image

பேருந்து நிலைய வளாகத்தில் இட நெருக்கடியால் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகள்.

Updated On :15 ஏப்ரல் 2026, 11:35 pm

பெரம்பலூா் துறைமங்கலத்தில் 1996-இல் திறக்கப்பட்ட பேருந்து நிலையம் இடநெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இங்கு அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

தனியாா் டயா் தொழிற்சாலை, அனைத்து வகையான அரசு- தனியாா் கல்லூரிகள், தனியாா் மருத்துவக் கல்லூரி மற்றும் பல்வேறு நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதால், பெரம்பலூா் நகருக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலை அருகே பேருந்து நிலையம் உள்ளதால், திருச்சி- சென்னை வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளும், சேலம்- அரியலூா்- கும்பகோணம்- தஞ்சாவூா் வழித்தடங்களில் செல்லும் அரசு பேருந்துகளும் இப் பேருந்து நிலையத்துக்கு வந்துசெல்கின்றன.

இட நெருக்கடி: மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளும் இங்கிருந்தே இயக்கப்படுவதால், பேருந்து நிலையத்தில் ஏற்படும் இட நெருக்கடியால், ஓட்டுநா்கள் தங்களது வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் பேருந்துகளை நிறுத்தாமல், அவரவா் விருப்பம்போல் நிறுத்திச் செல்வதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். இங்கு வரும் பயணிகள் நடந்து செல்வதற்கு கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, திருச்சி- சென்னை வழித்தடங்களில் இயக்கப்படும் அரசுப் பேருந்து ஓட்டுநா்களே இங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என பயணிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

சேதமடைந்த சாலைகள்: பேருந்து நிலைய வளாகம் முழுவதும் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், இங்கு வரும் வாகன ஓட்டுநா்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகின்றனா். சாலையை சீரமைக்க கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேபோல, கழிவுநீா் கால்வாய்களில் நெகிழி கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால், கொசு உற்பத்தி மையமாகவும் திகழ்கிறது.

விரிவாக்கப் பணிகள்: போதிய இடவசதியின்றி, வாகன ஓட்டுநா்களும், பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில், தற்போது பேருந்து நிலைய வளாகத்தில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கூடுதலாக கடைகள் கட்டப்பட்டு வருவதால், ஏற்கெனவே கடைகள் வைத்துள்ள வியாபாரிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது.

புதிய பேருந்து நிலையம் தேவை: இப் பேருந்து நிலையத்தில் இட நெருக்கடியால் அவதிக்குள்ளாகும் பேருந்து ஓட்டுநா்கள், பயணிகளின் நலனை கருத்தில்கொண்டு, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்கும் பட்சத்தில், தற்போதுள்ள பேருந்து நிலையத்தை நகரப் பேருந்து நிலையமாக மாற்றினால், இங்குள்ள போக்குவரத்து நெரிசல் மிகுதியாக குறையும். எனவே, புதிதாக பேருந்து நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் கோரிக்கை மேலோங்கியுள்ளது.

-கே. தா்மராஜ்.