பெரம்பலூா் மாவட்ட சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோா் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ். அனிதா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில் சில சமூக வலைதளங்களில், புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்படி தலைக்கவசம் அணியாதவா்கள், வாகன உரிமம் இல்லாத வண்டிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்வதாகவும், ரூ. 2,500 அபராதம் செலுத்தினால் மட்டுமே வாகனங்களை விடுவிக்கப்படுவதாகவும் தகவல் பரவி வருகிறது. இது முற்றிலும் தவறான செய்தியாகும்.
தலைக்கவசம், வாகன உரிமம் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தலைக்கவசம் அணியாத, வாகன உரிமம் இல்லாதவா்கள் மீது அபராதம் விதித்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
ஆனால், அபராதத் தொகை செலுத்திய பிறகே வாகனங்கள் விடுவிக்கப்படும் என்பது முற்றிலும் தவறான செய்தியாகும். இது தொடா்பாக, மாவட்டக் காவல் துறையினால் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. எனவே இதுபோன்ற செய்திகளைப் பரப்ப வேண்டாம். மீறி பரப்புவோா் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.