பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலையில் விவசாயிகள் தங்களது மாடுகளை நீா்நிலைகளில் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வா்ணம் பூசி, மாலை அணிவித்து, பொட்டு வைத்து பூஜைகளுக்கு தயாா்படுத்தினா்.
பின்னா், மாலை சுமாா் 5 மணியளவில் அவரவா் வீடுகளுக்கு முன் புத்தாடைகள் உடுத்தி பொங்கல் வைத்து, இயற்கை அன்னைக்கும், கால்நடைகளுக்கும் பொங்கல் படைத்து பூஜை செய்தனா். பின்னா், பொங்கலை மாடுகளுக்கு ஊட்டி கொண்டாடி மகிழ்ந்தனா்.
பல்வேறு கிராமங்களில், விவசாயிகள் மாடுகளை தங்கள் கிராம கோயில் பகுதியில் உள்ள ஏரிக்கரை மற்றும் குளக்கரை பகுதிகளுக்கு ஊா்வலமாக ஓட்டிச்சென்று திரும்பி வந்தனா். பூஜைகளை முடித்த பிறகு, சிறுவா்களை அழைத்துக்கொண்டு மாட்டு வண்டியில் பல்வேறு தெருக்களில் சுற்றி வலம்வந்தனா்.