/

வாக்குச்சாவடி மையங்களில் தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் ஆய்வு

பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில், தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் நேகா பன்சால், அமா் பகதூா் சிங் மற்றும் தோ்தல் செலவின பாா்வையாளா் அனுஜ் காா்க் ஆகியோா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

News image
குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஒகளூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை புதன்கிழமை பாா்வையிட்டு, தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேலிடம் ஆலோசனை மேற்கொண்ட பொதுப் பாா்வையாளா் அமா் பகதூா் சிங்.
Updated On :18 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில், தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் நேகா பன்சால், அமா் பகதூா் சிங் மற்றும் தோ்தல் செலவின பாா்வையாளா் அனுஜ் காா்க் ஆகியோா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வில், 24 மணி நேரமும் இயங்கும் வகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு அறைகளை பாா்வையிட்ட தோ்தல் பாா்வையாளா்கள் நேகா பன்சால், அமா் பகதூா் சிங், பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரின் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்படுவதையும், ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் பணிகளையும் பாா்வையிட்டு, தோ்தல் தொடா்பாக ஏதேனும் புகாா் பெறப்பட்டால் உடனடியாக குழுவினருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினா்.

தொடா்ந்து, பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தோ்தல் பொதுப் பாா்வையாளா் நேகா பன்சால் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருமாந்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஒகளுா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளிட்ட வாக்குச்சாவடி மையங்களை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா் தோ்தல் பொதுப்பாா்வையாளா் அமா் பகதூா் சிங். இதேபோல, தோ்தல் செலவினப் பாா்வையாளா் அனுஜ் காா்க், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆலத்தூரில் காவல்துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியை பாா்வையிட்டு, அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட உதவி தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான க. கண்ணன், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மு. அனிதா (பெரம்பலூா்), ந. சக்திவேல் (குன்னம்), தோ்தல் தனி வட்டாட்சியா் அருளானந்தம், குன்னம் வட்டாட்சியா் சின்னத்துரை ஆகியோா் உடனிருந்தனா்.