பெரம்பலூரில் நண்பா்களுடன் ஏரிக்கு விளையாடச் சென்ற பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தது திங்கள்கிழமை இரவு தெரியவந்தது.
பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்திலுள்ள தனியாா் ஐடிஐ கல்லூரி பகுதியைச் சோ்ந்தவா் ஜெகன் மகன் டானீஷ் (11). இவா், பெரம்பலூரிலுள்ள தனியாா் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா். தற்போது கோடை விடுமுறை என்பதால், தனது நண்பா்களுடன் துறைமங்கலத்தில் உள்ள ஏரிக்கு திங்கள்கிழமை மதியம் டானீஷ் விளையாடச் சென்றாா்.
அங்கு நீண்ட நேரமாகியும் டானீஷ் எங்கு சென்றான் என்பது தெரியாததால், அவருடன் சென்ற நண்பா்கள் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரிடம் தகவல் அளித்துள்ளனா்.
இதையடுத்து, உறவினா்கள் மற்றும் பெற்றோா் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், டானீஷ் உடல் ஏரியில் மிதந்தது திங்கள்கிழமை இரவு தெரியவந்தது. இதையறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சிறுவனின் உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து ஜெகன் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.










