தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சி மீது இருக்கும் கோபத்தை விட ஆட்சி மாற்றத்தில் திமுகவின் நிலைப்பாட்டின் மீது மக்கள் அதிக கோபத்தில் இருக்கின்றனர் என்றார் திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின்.
புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகேயுள்ள பசுமலைப்பட்டியில் வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் புதன்கிழமை நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் இணையும் விழாவில் பங்கேற்று மேலும் அவர் பேசியது:
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அரசின் திட்டங்களைப் பற்றி பேசாமல், எதிர்க்கட்சிகளை வசைபாடி வருகின்றனர். சட்டப்பேரவையில் தமிழகத்தில் டெங்கு இல்லை என்று உறுதியாகக் கூறினார் சுகாதாரத் துறை அமைச்சர். அமைச்சர் மாவட்டத்தில் எத்தனை உயிர்கள் பலியாகியுள்ளன என்ற விவரங்களை தெரிவித்துள்ளேன். அமைச்சர் வழக்கு தொடுத்தால் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். இதே நிலைமைதான், முதல்வர் எடப்பாடி தொகுதியிலும் நீடிக்கிறது. இதேபோல் உயர்நீதிமன்றத்தில் உத்தரவில், சத்துணவு அமைப்பாளர் பணிநியமனத்தில் மாவட்ட ஆட்சியரும், உதவியாளரும் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
எங்கே போனாலும், இந்த ஆட்சியை எப்போது மாற்றப்போகிறீர்கள் எனக்கேட்கின்றனர். இந்த விஷயத்தில் திமுகவின் நிலைப்பாடு காரணமாக, தமிழகத்தில் நடக்கும் இந்த ஆட்சி மீது இருக்கும் கோபத்தை விட திமுக மீது மக்கள் அதிக கோபத்தில் இருக்கின்றனர். நெடுவாசல் உள்பட பல்வேறு பிரச்னைகளில் மக்களுக்கு எதிராக செயல்படும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்களை முழு வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார் மு.க.ஸ்டாலின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.