தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டுக்கு புதுகை அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையும், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து ஆண்டுதோறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு வெள்ளி விழா மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது. மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்கான அறிவியல் தொழில்நுட்பம் & புதுமைக் கண்டுபிடிப்புகள் என்ற கருப்பொருளில் புதுகை மாவட்ட மாநாடு, அறிவியல் இயக்கக் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், 31 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது. 155 மாணவர்கள், 30 வழிகாட்டி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடக்க நிகழ்வில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.ஜெயராம் அறிமுகவுரையாற்றினார். அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் எஸ்.டி. பாலகிருஷ்ணன் தொடக்கி வைத்துப் பேசினார். பேராசிரியர்கள் எஸ்.விஸ்வநாதன், வினோத் குமார், ராதா, முத்துக்குமார் ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்றனர். மதியம் நடைபெற்ற நிறைவு விழாவுக்கு மாவட்டத் தலைவர் அ.மணவாளன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் சதாசிவம், கா.ஜெயபாலன், வள்ளல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மறவாமதுரை, ஆவுடையார்கோவில், மீனம்பட்டி மற்றும் வடசேரி உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் ஆய்வுகள் தேர்வு செய்யப்பட்டது. மாணவர்களுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ம.குணசேகரன் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எம்.வீரமுத்து வரவேற்புரையாற்றினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.