உலக மனநல தினத்தையொட்டி, புதுக்கோட்டை அருகே வல்லத்திராகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மனநலம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
மாவட்ட சுகாதார இணை இயக்குநர் ஆர்.சுரேஷ்குமார் தொடக்கி வைத்தார். இதில், மாவட்ட மன நல மருத்துவ அலுவலர் கார்த்திக் தெய்வநாயகம் பங்கேற்று, மனநலம் தொடர்பான விழிப்புணர்வு கையேடுகளை வழங்கிப் பேசியது:
வாய்ப்புகள், சவால்களைவிட கூடுதலாக இருக்கும்போது பணி இனிமையானதாகிறது. சவால்களை சமாளிக்க முடியாமல் போகும்போதும் அதிக பணிச்சுமை, திறனுக்கு மீறிய பணிகள், குறைந்த ஊதியத்தில் வேலை, காரணமற்ற கோபம் போன்ற காரணிகளாலும் மன உளைச்சல் ஏற்படுகிறது. இத்தகைய சமாளிக்க முடியாத மனஉளைச்சல்தான் மனநல பிரச்னைகளுக்கு காரணமாகிறது.
மனநலம் பாதிக்கப்படுவதால் பணித்திறன் குறைகிறது. இதனால், ஒரு நிறுவனத்தின் முன்னேற்றமும் அதன் மூலம் சமுதாயத்தின் முன்னேற்றமும் பாதிக்கப்படுகிறது.
இதனால் படபடப்பு, பதற்றம், எரிச்சல், அடிக்கடி கோபம், தூக்கமின்மை, பசியின்மை, மனக்கவலை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. பணியாளர்களின் மனநலமே ஒரு நிறுவனத்தின முன்னேற்றத்தையும், சமூகத்தின் முன்னேற்றத்தையும் உறுதி செய்யும். எனவே, ஒவ்வொருவரின் மனநலமும் நாட்டுக்கு மிகவும் முக்கியமானது என்றார்.
பள்ளித் தலைமை ஆசிரியர் சேகர், உதவித் தலைமை ஆசிரியர் திருமேனிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.