ஆவுடையார்கோவிலில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆவுடையார்கோவில் ரோட்டரி கிளப் மற்றும் ஸ்கார்ப் இந்தியா (மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவனம்) இணைந்து நடத்திய விளையாட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழாவிற்கு ஆவுடையார்கோவில் ரோட்டரி கிளப் தலைவர் ஆர்.பெரியமுத்து தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்கார்ப் இந்தியா மூத்த திட்ட ஒருங்கிணைப்பாளர் டீ.கோடீஸ்வரன் பேசுகையில், இந்த அமைப்பு மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தத்து எடுத்து அவர்களை சக மனிதர்களாக மாற்றி வாழ்வளிக்கும் அரிய தொண்டை செய்து வருவதாகவும் அவர்கள் மற்றவர்களை போல சகஜமாக வாழ இது போன்ற விழாக்கள் நடத்தி விளையாட்டு போட்டிகள் மூலம் அவர்களை மகிழ்ச்சியடைய செய்து பரிசுகள் வழங்கும்போது புத்துணர்வு பெறுவதாக கூறினார். பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் அ.ஆறுமுகம், முன்னாள் ரோட்டரி கிளப் தலைவர்கள் ஆ.கராத்தே கண்ணையன், நா.சந்திரமோகன்,டி.ஏ.என்.பீர்சேக் உள்ளிட்டோர் பரிசுகள் வழங்கி வாழ்த்திப்பேசினர்.
நிகழ்ச்சியில் சமுதாய தொடர்பு ஒருங்கிணைப்பாளர் டி.குணச்செல்வி, மருத்துவ ஒருங்கிணைப்பாளர் எஸ்.வசீகரன், வி.செல்வராணி, எம்.அம்பிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டு விளக்கவுரையாற்றினார்கள்.
முன்னதாக ஆவுடையார்கோவில் ரோட்டரி கிளப் செயலாளர் எஸ்.ஜெயராஜ் வரவேற்றார் நிறைவில் ஸ்கார்ப் இந்தியாவின் கே.ராஜேஸ்வரி நன்றி கூறினார்.