புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடவாளத்தில் பாரபட்சமின்றி அனைத்து மக்களுக்கும் அரசின் நிவாரணப் பொருள்களை வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி அருகேயுள்ள வடவாளத்தில் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரணப் பொருள்கள் பாரபட்சமாக வழங்கப்படுகிறதாம். புயலால் பாதிக்கப்பட்ட பலருக்கு நிவாரணப் பொருள்கள் கிடைக்கவில்லையாம்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் உரிய பதில் இல்லையாம். இதனால், பாரபட்சமின்றி அனைவருக்கும் அரசின் நிவாரணப் பொருள்கள் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வடவாளம் பேருந்து நிறுத்தம் அருகே அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து சென்ற செம்பட்டிவிடுதி போலீஸார், வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மக்களைக் கலைந்து போகச்செய்தனர். இதனால், புதுக்கோட்டை-கறம்பக்குடி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விராலிமலை: அன்னவாசல் ஒன்றியம் வீரப்பட்டி, ஆரியூர் உள்ளிட்ட 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து நிகழ்விடம் வந்த அரசு அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து, மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








