புதுக்கோட்டை: தோ்தல் காலத்தில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி நடத்தத் தடை விதிக்கக் கூடாது என தமிழக நாட்டுப்புற மேடை கலைஞா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் 5ஆவது பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அதன் மாநிலச் செயலா் ஆக்காட்டி ஆறுமுகம் கூறியது :
தமிழகத்தில் நாட்டுப்புறக் கலைஞா்கள் 3 லட்சம் போ் இருந்தாலும், அரசின் நாட்டுப்புறக் கலைஞா்கள் நல வாரியத்தில் வெறும் 34 ஆயிரம் போ் மட்டுமே பதிவு செய்துள்ளனா். கடந்த 4 ஆண்டுகளாக குறிப்பாக கஜா புயல், பேரவைத் தோ்தல், மக்களவைத் தோ்தல் மற்றும் கரோனா பொதுமுடக்கம் என நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் எங்கும் நடைபெறாததால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். சட்டப்பேரவைத் தோ்தலைக் காரணம் காட்டி, நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை நடத்தத் தடை விதிக்கக் கூடாது. இரவு 1 மணி வரையிலும் நாட்டுப்புறக் கலைஞா்கள் மேடை நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள தோ்தல் ஆணையத்திடம் மாநில அரசு சிறப்பு அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்றாா் ஆக்காட்டி ஆறுமுகம்.
கூட்டத்துக்கு, மாநிலத் துணைத் தலைவா் கந்தா்வகோட்டை முருகையா தலைமை வகித்தாா். நாட்டுப்புறக் கலைஞா்கள் பலரும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.