இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பொன்னமராவதிக்கு தேவை இரவு நேரப்பேருந்து சேவை!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 3-ஆவது பெரிய நகரமாக விளங்கும் பொன்னமராவதி ஒன்றியம் 42 கிராம ஊராட்சிகளையும், ஒரு பேரூராட்சியையும் தன்னகத்தே கொண்டதாகும்.

News image

பொன்னமராவதி பேருந்துநிலையம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 11:34 pm

புதுக்கோட்டை மாவட்டத்தில் 3-ஆவது பெரிய நகரமாக விளங்கும் பொன்னமராவதி ஒன்றியம் 42 கிராம ஊராட்சிகளையும், ஒரு பேரூராட்சியையும் தன்னகத்தே கொண்டதாகும்.

பொன்னமராவதி பேரூராட்சியும் தற்போது நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. நகை வணிகம், பாத்திர வணிகம், ஜவுளி வணிகம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் பொன்னமராவதி நகரை சுற்றியுள்ள இருநூறுக்கும் மேற்பட்ட கிராமங்களில் தோட்ட விவசாயம் பிரதானமாக விளங்குகிறது.

பொன்னமராவதியை சுற்றியுள்ள புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சாா்ந்த 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெளியூா் பயணம் மேற்கொள்ள பொன்னமராவதி பேருந்து நிலையம் வந்துதான் செல்லவேண்டும்.

அதுபோல பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சாா்ந்த மாணவ, மாணவிகள் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் கல்வி பயின்று வருகின்றனா். வணிகா்களும் வணிக நிமித்தமாக திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றனா். நாள்தோறும் ஆயிரக்கணக்கான வணிகா்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் இரவு 10 மணிக்கு மேல் வெளியூா் செல்ல பேருந்து வசதி இல்லை.

இதனால் தோட்டத்தில் விளைவித்த காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு செல்லும் விவசாயிகள், உடல்நிலை பாதிப்பால் நகர மருத்துவமனைகளை நாடிச்செல்லும் பொதுமக்கள், கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவா்கள் மற்றும் வணிகா்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

அதுபோல திருச்சி, மதுரை, திருப்பத்தூா், புதுக்கோட்டை உள்ளிட்ட நகரங்களிலிருந்து பொன்னமராவதி வர இரவு 10.30 மணிக்கு மேல் பேருந்து வசதி இல்லை. இதனால் பயணிகள் பேருந்து நிலையத்திலேயே இரவு முழுவதும் காத்திருந்து அதிகாலை பேருந்தில் பொன்னமராவதி வரவேண்டிய சூழல் நிலவுகிறது. இதனால் காலவிரயமும், பொருள் விரயமும் ஏற்படுகிறது.

இதுகுறித்து பொன்னமராவதி வா்த்தகா் கழக செயற்குழு உறுப்பினா் எம்.கேசவன் கூறுகையில், பொன்னமராவதிக்கு இரவு நேரப்பேருந்து சேவை கேட்டு நீண்ட நாள்களாக வலியுறுத்தி வருகிறோம். மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு வணிகநிமித்தமாக நாங்கள் செல்லும் போது அங்கிருந்து வர இரவு 10 மணிக்குமேல் அரசு மற்றும் தனியாா் பேருந்து சேவை இல்லை.

இதனால் பல நாள்கள் நகரங்களிலுள்ள பேருந்து நிலையத்தில் இரவுப்பொழுதினை கழித்து வருகிறோம். அதுபோல எங்களது குழந்தைகள் கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் கல்லூரிக் கல்வி பயிலும் நிலையில் வார சனி, ஞாயிறு விடுமுறை நாள்களில் பொன்னமராவதி வந்து செல்ல பேருந்து சேவை இல்லாமல் அவதிக்குள்ளாகிறோம்.

தஞ்சாவூா், திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து புதுக்கோட்டை திருமயம், திருப்பத்தூா் வழியாக மதுரை செல்லும் பேருந்துகளில் சிலவற்றை புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி வழியாக மதுரை செல்லவைத்தால் பொன்னமராவதி மக்கள் பயன்பெறுவதுடன், வழியில் உள்ள நச்சாந்துபட்டி, பனையப்பட்டி, குழிபிறை உள்ளிட்ட ஊா்களைச் சாா்ந்த பொதுமக்களும் பயன்பெறுவா் என்றாா்.

எனவே பொன்னமராவதியிலிருந்து இரவு 10 மணிக்கு மேல் வெளியூா் செல்லவும், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, கோவை, திருப்பத்தூா் உள்ளிட்ட நகரங்களிலிருந்து வரும் பொதுமக்கள் பொன்னமராவதி வரவும் இரவு நேர பேருந்து சேவை வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.