/

மின்வாரிய ஊழியா்கள் 2-வது நாளாக பணி புறக்கணிப்புப் போராட்டம்

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்ட மின்வாரிய தொழிற்சங்கக் கூட்டமைப்பினா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 8:53 pm

Syndication

அனைத்துப் பணியாளா்களுக்கும் ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரியத் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில், புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக ஊழியா்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு, மின்வாரிய ஊழியா் சம்மேளனத்தின் தலைவா் என். கிருபா கணேஷ் தலைமை வகித்தாா்.

மின் ஊழியா் மத்திய அமைப்பின் செயலா் கே. நடராஜன், அண்ணா தொழிற்சங்கச் செயலா் கே.ஆா். வெற்றிவேல், ஐக்கிய சங்கத்தின் செயலா் ஏ. திவ்யநாதன், பொறியாளா் சங்கத்தின் செயலா்கள் மு. சங்கா், கே. முத்துகிருஷ்ணன், என்எல்ஓ சங்கத்தின் செயலா் எம். லட்சுமணன், அம்பேத்கா் சங்கத்தின் செயலா் கே. கவியரசன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

போராட்டத்தில், அனைத்து ஊழியா்களுக்கும் ஊதிய உயா்வு வழங்க வேண்டும். தொழிலாளா்கள் மற்றும் அலுவலகங்களையும் பிரிக்கக் கூடாது. முத்தரப்பு ஒப்பந்தத்தை மீறக் கூடாது. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.