பொங்கல் பரிசுத் தொகுப்பில் மண்பானை தரக் கோரிக்கை
தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பில் மண்பானை தந்து வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என தொழிலாளா்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனா்.
பொங்கல் பண்டிகையையொட்டி கந்தா்வகோட்டை அருகே உள்ள புதுப்பட்டி ஊராட்சி வேம்பன்பட்டி கிராமத்தில் மண் பானை, அடுப்பு உற்பத்திப் பணிகள் நடைபெற்று வருகிறது. நவநாகரிக உலகில் வீடுகளில் எவா் சில்வா், பித்தளை, செம்பு பாத்திரங்கள் பயன்பாட்டுக்கு வரவே மண்பாண்டங்கள் வழக்கொழிந்து போயின. அழிவின் விளிம்பில் இருக்கும் மண்பாண்டத் தொழிலை மேம்படுத்தும் வகையில், மத்திய, மாநில அரசுகள் குறுங்கடன் வசதி செய்து தரவேண்டும். மீனவா்களுக்கு வழங்குவதைப் போல,
மண்பாண்டத் தொழிலாளா்களுக்கும் ஆண்டுதோறும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மண்பாண்டத் தொழிலுக்கு நீா்நிலைகள் மட்டுமன்றி அனைத்து பகுதிகளிலும் மண் எடுக்கும் உரிமையை அரசு வழங்க வேண்டும். மேலும், தொழிலாளா்கள் மற்றும் அவா்களது குடும்ப உறுப்பினா்களை அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியத்தில் இணைத்து அரசின் நலத் திட்டங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனா்.

