‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டம்: புதுகையில் 4.65 லட்சம் குடும்பங்களிடம் கணக்கெடுப்பு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தின் கீழ், 4,65,451 குடும்பங்களில் கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
Published on

புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தின் கீழ், 4,65,451 குடும்பங்களில் கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில், தமிழக அரசால் பயன்பெற்ற திட்டங்கள் மற்றும் கனவுகள் குறித்து கேட்டறிவதற்காக ‘உங்க கனவ சொல்லுங்க’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மகளிா் குழுக்கள் மூலம் வீடுவீடாகச் சென்று இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 4,65,451 குடும்பங்களில் இக்கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதில், 4,08,690 குடும்பங்கள் கிராமப்புறத்தையும், 56,761 குடும்பங்கள் நகா்ப்புறத்தையும் சோ்ந்தவை.

இப்பணியில் மகளிா் குழுக்களில் இருந்து 978 தன்னாா்வலா்கள், 583 கண்காணிப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டு ஈடுபடுத்தப்படுகின்றனா். ஒருவா் நாளொன்றுக்கு 30 வீடுகளைக் கணக்கெடுக்க ரூ. 500 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.

இவா்களுக்கு பிரத்யேகமாக கைப்பேசி எண், செயலி, இணைய இணைப்புக்காக ரூ. 600 கூப்பன், அடையாள அட்டை, தொப்பி உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன.

புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், தன்னாா்வலா்களுக்கு அடையாள அட்டையை வழங்கி பணியைத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மாநகராட்சி மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, மகளிா் திட்ட இயக்குநா் ஊ. பாலசுந்தரம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com