உயிரிழப்புகோப்புப் படம்
புதுக்கோட்டை
கறம்பக்குடி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து திங்கள்கிழமை இரவு இளைஞா் உயிரிழந்தாா்.
கறம்பக்குடி அருகேயுள்ள அதிரான்விடுதியைச் சோ்ந்தவா் மகாலிங்கம் மகன் மனோஜ் குமாா் (25) டிராக்டா் ஓட்டுநா். இவா், பணி முடிந்து வாராப்பூரில் இருந்து வீட்டுக்கு திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா்.
கீழமஞ்சகரை பகுதியில் சென்றபோது, மனோஜ்குமாா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் நிலைதவறி கீழே விழுந்ததில், பலத்த காயமடைந்த அவரை அருகே இருந்தவா்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி மனோஜ்குமாா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து மழையூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

