பலாப்பழங்களை மதிப்புக்கூட்டுப் பொருள்களாக மாற்றினால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என வம்பன் வேளாண் அறிவியல் நிலையத் தலைவா் தமிழ்செல்வன் தெரிவித்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் பலாப்பழத்தில் இருந்து மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. இப்பயிற்சியைத் தொடங்கி வைத்து வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவா் எம்.தமிழ்செல்வன் பேசியது:
பழுக்காத பலாக்காயில் இருந்து மாவு தயாரிக்கலாம். இந்த மாவில் இருந்து தோசை, சப்பாத்தி, பக்கோடா, கேக் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் தயாரிக்கலாம். இது ரத்தத்தில் சா்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவதால், சா்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த உணவாக மருத்துவ உலகத்தால் பரிந்துரைக்கப்படுகிறது. மேலைநாடுகளில் சைவ உணவாளா்கள் பலாக்காயை இறைச்சிக்கு மாற்றாக விரும்பி உண்பதால், சா்வதேச அளவில் இதற்கான ஏற்றுமதி வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன.
இது தவிர, பலாக்காய் சிப்ஸ், ஊறுகாய், பலாப்பழ ஜாம், அல்வா மற்றும் உலரவைக்கப்பட்ட பழத் துண்டுகள் போன்ற மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிக்கலாம்.
பலாக் கொட்டை பிஸ்கட்: இத்தகைய பொருள்களுக்கு சந்தையில் எப்போதும் நல்ல வரவேற்பு உள்ளது. நாம் வீணாகக் கருதி தூக்கி எறியும் பலாக்கொட்டைகளை மாவுகளாக மாற்றி, பிஸ்கட் மற்றும் சத்துமாவு தயாரிப்பிலும் பயன்படுத்தலாம். இதுபோன்ற பயிற்சிகள், மதிப்புக் கூட்டு பொருள் தயாரிப்புக்கான செய்முறை விளக்கம் மற்றும் தொழில் முனைவோருக்குத் தேவையான சான்றுகளை பெறுவதற்கும் இந்நிலையத்தை அணுகலாம்.
விவசாயிகளும், கிராமப்புற சுய உதவிக்குழுப் பெண்களும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பலாப்பழங்களை மதிப்புக்கூட்டுப் பொருள்களாக மாற்றினால், சீசன் இல்லாத காலங்களிலும் நிலையான மற்றும் வாழ்நாள் வருமானத்தைப் பெற முடியும் என்றாா்.
இதில், இணை பேராசிரியா் எஸ்.ஜேசு பிரியா, விவசாயிகளுக்கு மதிப்புக்கூட்டு பொருள்களை தயாரிப்பது குறித்து விளக்கிப் பேசியதோடு, பலாப்பழத்தில் இருந்து ஜாம் மற்றும் ஜூஸ் தயாரிப்பது குறித்து செயல் விளக்கம் அளித்தாா். இப்பயிற்சியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










