பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த வேளாண்மைத் துறை அனைத்துநிலை அலுவலர்களுக்கும் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குநர் அ. மதியழகன் பேசியது:
உளுந்து, கடலை, எள், மக்காச்சோளம் போன்ற பயிர்களை அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்ய அறிவுறுத்த வேண்டும்.
மக்காச்சோளம் குறைந்த நீர் தேவையுடைய பயிர் என்பதாலும், விற்பனை வாய்ப்பு அதிகம் உள்ளதாலும் இப்பகுதி விவசாயிகளை மக்காச் சோளப் பயிரை மாற்றுப் பயிராக வருகிற பருவத்தில் பயிர் செய்ய ஆலோசனை வழங்க வேண்டும். பாசன நீர் பற்றாக்குறையைப் போக்க நுண்ணீர் பாசனத் திட்டத்தை அதிக அளவில் விவசாயிகளிடம் பரிந்துரை செய்ய வேண்டும். நுண்ணீர் பாசனத் திட்டத்திற்கு மத்திய அரசு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்வதால், அனைத்து தென்னை விவசாயிகளையும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் அனைத்து திட்டங்களையும் விரைவில் முடித்திட உரிய ஆலோசனைகள் வழங்கினார். இதைத் தொடர்ந்து அவர் தாமரங்கோட்டையைச் சேர்ந்த 2 விவசாயிகளுக்கு தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் 18 அடி நீளம், 15 அடி அகலம் கொண்ட தார்ப்பாய் வழங்கினார். இத்திட்டத்தில் தார்ப்பாய் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகிப் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
வேளாண்மை துணை இயக்குநர் அ.ஜஸ்டின், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய வட்டார உதவி இயக்குநர்கள் எஸ். ஈஸ்வர், வை. தயாளன், ஆர்.மதியரசன், மீனாட்சிசுந்தரம் ஆகியோர் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.