டெல்டா மாவட்டங்களில் முழுவீச்சில் தூர்வாரும் பணிகள்
மேட்டூர் அணை திறப்பதால், டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 4,649 கிலோமீட்டர் தூரத்திற்கு சிறப்பு தூர்வாரும் பணிகள் கடந்த 23 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,356.44 கிலோமீட்டர் தூரத்திற்கு 170 பணிகள் 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. மே 30 தேதிக்குள் பணிகள் முடிக்க இருந்த நிலையில், தற்போது மே 24 ஆம் தேதி மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்படுகிறது.
இதையும் படிக்க- மே 28ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தூர்வாரும் பணிகள் திட்டமிட்டப்படி முடிப்பதற்குள், அதாவது முன்கூட்டியே ஆறு நாட்களுக்கு முன்பே தண்ணீர் திறப்பதால் தூர்வாரும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெறுகிறது. இது குறித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் கண்ணன் கூறுகையில், முன்கூட்டியே தண்ணீர் திறப்பது மகிழ்ச்சி தான், ஆனால் அதே மகிழ்ச்சி தண்ணீர் கடைமடை வரை சென்றடைய வேண்டும் என்பதே.
பல இடங்களில் தற்போது தான் பணிகள் நடைபெற்று வருகிறது. தண்ணீர் வருவதற்குள் இந்த பணிகள் முழுமையாக முடிவடைவதற்கு சாத்தியகூறுகள் இல்லை, 50% பணிகளாவது முடிவடைய வேண்டும் என்றால், போர்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் அரசு முழு கவனம் செலுத்தி தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.