தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தஞ்சாவூர் மறை மாவட்ட முன்னாள் ஆயர் உடல்நலக் குறைவு காரணமாக ஆம்புலன்ஸில் வெள்ளிக்கிழமை காலை வந்து வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
தஞ்சாவூர் மறை மாவட்ட ஆயராக எம். தேவதாஸ் ஆம்புரோஸ் அடிகளார் 25 ஆண்டுகளாகப் பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வுபெற்றார். அவருக்கு வயது 77. அருளானந்த நகரில் உள்ள ஓய்வு இல்லத்தில் வசித்து வரும் அடிகளார் உடல்நலக் குறைவு காரணமாக இல்லத்திலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் ஜனநாயக கடமையை ஆற்ற அடிகளார், ஆம்புலன்ஸ் வாகனத்தில் புதுக்கோட்டை சாலையில் உள்ள கில்டு ஆப் சர்வீஸ் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு வெள்ளிக்கிழமை காலை சென்றார்.
பின்னர் சக்கர நாற்காலியில் அடிகளார் அமர்த்தப்பட்டு வாக்குப்பதிவு மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வாக்குப்பதிவு செய்த அவர் பின்னர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.