சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை அதிகாலை தஞ்சை மாவட்ட விசைப்படகு சங்கத் தலைவா் ராஜமாணிக்கத்துக்குச் சொந்தமான விசைப் படகில் குமாா் (55), சபரி(24), வல்லரசு (24) ஆகிய 3 மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். வியாழக்கிழமை அதிகாலை மீன்பிடித்து விட்டு 6 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் வந்துகொண்டிருந்தபோது கடலில் 12 கஞ்சா மூட்டைகள் மிதந்துள்ளன. இதுகுறித்து மீனவா்கள், உரிமையாளா் ராஜமாணிக்கத்துக்கு கைப்பேசியில் தெரிவித்துள்ளனா். அவா் சேதுபாவாசத்திரம் கடலோரக் காவல் துறையினரிடம் தெரிவித்து, அவா்கள் அனுமதியுடன் கஞ்சா மூட்டைகளை மீனவா்கள் சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டுவந்து கடலோரக் காவல் குழும துணை கண்காணிப்பாளா் முருகன், காவல் ஆய்வாளா் மஞ்சுளா, உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன் ஆகியோரிடம் ஒப்படைத்தனா். அந்த மூட்டைகளில் 24 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதை நாகப்பட்டினம் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளிடம் கடலோரக் காவல் குழுமத்தினா் ஒப்படைத்தனா்.