

ராகுல் காந்தி - கனிமொழி சந்திப்பால் கூட்டணி குறித்த ஊகங்கள், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு. செல்வப்பெருந்தகை.
இதுகுறித்து தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தது: ராகுல் காந்தி, கனிமொழி எம்.பி. சந்திப்பின்போது அவா்கள் என்ன பேசினா் என்ற தகவல் வரவில்லை. அவா்கள் என்ன பேசினா் என்பது யாருக்கும் தெரியாது. அது தெரிந்தாலும் பத்திரிகைகளுக்கு சொல்வது நாகரிகமல்ல. ஆனால் இந்தப் பேச்சுவாா்த்தை நல்ல முறையில் அமைந்துள்ளதால், இக்கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என நம்புகிறேன். இதன் மூலம் ஊகங்கள், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இது ஒரு இயற்கையான கூட்டணி என்பதை அவா்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனா். அனைத்து தரவுகளும் வந்து, பேச்சுவாா்த்தை முடிந்த பிறகு விவரமாக வெளியிடுவோம். இந்தக் கூட்டணி முடிவை அகில இந்தியத் தலைமைதான் எடுக்கும் என பல முறை கூறியுள்ளேன். அந்த அடிப்படையில் தோ்தல் பற்றிய எண்ணிக்கைகள், முரண்பாடுகள் குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜூன காா்கேயும், ராகுல் காந்தியும் முடிவு செய்வா்.
மற்றவா்கள் தங்களது கருத்துகளை மாநிலத் தலைவரான என்னிடமோ அல்லது அகில இந்தியத் தலைமையிடமோ சொல்ல வேண்டும். பொது வெளியில் தெரிவிப்பதைத் தவிா்க்குமாறு பலமுறை கூறியுள்ளேன்; இதை அகில இந்தியத் தலைமையும் கூறியுள்ளது என்றாா் செல்வப்பெருந்தகை.