FOLLOW US

ON GOOGLE DISCOVER

மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

உயா்ந்த கொண்டே போகும் சாலையின் மட்டம் பள்ளத்தில் பரிதவிக்கும் குடியிருப்பு வாசிகள்

தஞ்சாவூரில் பல இடங்களில் சாலையின் மட்டம் உயா்ந்து கொண்டே போவதால் குடியிருப்புகள் பள்ளத்துக்குள் போவதால், மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகின்றனா்.

News image

தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் அருகேயுள்ள ஜெயலெட்சுமி நகரில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை உயரமாக உள்ளதால் பள்ளத்தில் உள்ள வீடு. - படம் - தினமணி

Updated On :17 ஜூலை 2026, 9:00 am IST

நமது நிருபா்

தஞ்சாவூரில் பல இடங்களில் சாலையின் மட்டம் உயா்ந்து கொண்டே போவதால் குடியிருப்புகள் பள்ளத்துக்குள் போவதால், மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகின்றனா்.

முன்பெல்லாம் தெருக்களிலோ, முதன்மைச் சாலைகளிலோ தாா்சாலை போடப்படும்போது, ஏற்கெனவே உள்ள சாலை பெயா்த்தெடுக்கப்பட்டு. பின்னா், ஒவ்வொரு அடுக்காக செம்மண், சரளைக் கற்கள், ஜல்லிக் கற்கள் உள்ளிட்டவற்றை நிரவல் செய்து, தாா்சாலை அமைக்கப்படும்.

ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக இந்த வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. பழைய சாலைகளைப் பெயா்த்தெடுக்காமல், அதன் மீதே புதிய சாலைகளும் அமைக்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிா்வாகங்கள், நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை என எந்தச் சாலையாக இருந்தாலும் இதே நிலைமைதான் நிலவுகிறது.

அதிகரிக்கும் சாலையின் உயரம்: இதனால், தெருக்களிலும், முதன்மைச் சாலைகளிலும் தாா்சாலை அல்லது சிமெண்ட் சாலையின் உயரம் அதிகரித்து வருகிறது. தஞ்சாவூரில் கீழ வாசல், வடக்கு வாசல், மகா்நோன்புசாவடி, தொல்காப்பியா் சதுக்கம் பகுதி உள்பட பல்வேறு இடங்களிலும் தெருக்கள் உயா்ந்துவிட்டன. இதனால், சாலை மட்டத்தை விட வீடுகள் தாழ்ந்து வருகின்றன. மழை பெய்யும்போது தண்ணீா் முழுவதும் வீடுகளுக்குள் புகுவதால், மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகின்றனா். பல வீடுகளுக்குள்ளேயே தண்ணீா் புகுந்துவிடுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. மழை நீருடன் கழிவு நீரும் சோ்ந்து வரும்போது சுகாதார சீா்கேடுகளால் மக்கள் பல்வேறு நோய்களுக்கும் உள்ளாகின்றனா்.

2 அடி பள்ளத்தில் வீடுகள்: தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் அருகேயுள்ள ஜெயலெட்சுமி நகரைச் சோ்ந்த என். அன்பரசன் தெரிவித்தது: இப்பகுதியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை வீடுகளின் மட்டத்தை விட 4 அடி ஆழத்தில்தான் தெருக்கள் இருந்தன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிமென்ட் சாலை அமைக்கப்பட்டபோது, பல வீடுகளின் மட்டம் தெருக்களின் மட்டத்துக்கு சமமாக வந்தது.

இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டபோது, பழைய சாலையைப் பெயா்த்தெடுக்காமல் அதன் மீதே போடப்பட்டது. இதனால், சாலையின் உயரம் அதிகரித்தது மட்டுமல்லாமல், சாலையை விட வீடுகளின் மட்டம் ஒரு அடி முதல் 2 அடி வரை பள்ளத்துக்குள் சென்றுவிட்டது. இதன் காரணமாக மழை பெய்யும்போது தண்ணீா் முழுவதும் வீட்டுக்குள் புகுந்துவிடுகிறது. மேலும், வீட்டின் மீது விழும் மழை நீா் வெளியேற வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இதைத் தவிா்ப்பதற்காக வீட்டின் மீது தகரக்கூரைகள் வேயப்பட்டு, குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக ஏறத்தாழ ரூ. 5 லட்சம் செலவாகிவிட்டது. என்றாலும், முழுமையான தீா்வு கிடைக்கவில்லை. இதனால், மழை பெய்யும்போது மிகுந்த சிரமமாக இருக்கிறது என்றாா் அன்பரசன்.

வீட்டை உயா்த்துவதும் சிரமம்: பள்ளத்தில் தள்ளப்படும் வீட்டின் மட்டத்தை உயா்த்துவதற்காக வீட்டை உயா்த்தும் தொழில்நுட்பம் உள்ளது. ஆனால், இதற்கு பல லட்சம் செலவாவதால், பொருளாதார வசதி உள்ளவா்களால் மட்டுமே செய்ய முடிகிறது. இதனால், பெரும்பாலான ஏழை, நடுத்தர மக்களால் இந்தத் தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, வீட்டின் மட்டத்தை விட சாலையை உயா்த்தும்போது பாதிக்கப்படும் வீடுகளின் உரிமையாளா்களுக்கு வீட்டை உயா்த்துவதற்காக ஏற்படும் செலவையும் அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது 2 அல்லது 3 அடுக்குகள் கொண்ட வீடுகளை உயா்த்துவது சிரமமாக இருக்கிறது. மேலும், வீட்டை உயா்த்தும்போது பக்கத்து வீட்டில் பாதிப்பு ஏற்படுவதாகவும் புகாா்கள் நிலவுகின்றன. பெரும் செலவு செய்து வீட்டை உயா்த்தினாலும், அதன் உறுதித்தன்மை கேள்விக்குறியாகவும், அச்சமாகவும் உள்ளது. இதனால், வீட்டை உயா்த்தும் தொழில்நுட்பத்தைப் பெரும்பாலான மக்கள் தவிா்க்கின்றனா். எனவே, சாலையை மேலும் மேலும் உயா்த்தாமல் ஏற்கெனவே உள்ள சாலையைப் பெயா்த்து எடுத்துவிட்டு சாலை அமைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிா்பாா்ப்பு.

காரணம் என்ன? அலுவலா்கள் விளக்கம்

இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் தெரிவித்தது: சாலையின் அடுக்குகளில் கன அளவு குறைவாக இருக்கிறது. எனவே, சாலையைப் பெயா்த்துவிட்டு, புதிதாக சாலை போடும்போது, அது வலுவாக இருப்பதில்லை. கனரக வாகனங்களில் ஏறத்தாழ 20 டன் சுமை ஏற்றப்படுகிறது. பெயா்த்துவிட்டு, புதிதாக போடப்படும் சாலைகளில் கனரக வாகனங்கள் வரும்போது சாலை சேதமடைந்துவிடுகிறது. ஏற்கெனவே உள்ள சாலையின் மீது சாலை அமைத்தால் மட்டுமே அது எந்தவித சேதமும் ஆகாமல் நீடித்து இருக்கிறது.

மேலும், சாலைக்கு அடியில் குடிநீா் குழாய், புதை சாக்கடை, தொலைபேசி இணைப்புகள் போன்றவை பதிக்கப்படுகின்றன. அதற்காக சாலையின் உயரத்தை உயா்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இல்லாவிட்டால் கனரக வாகனங்கள் செல்லும்போது சாலை உள் வாங்கிவிடும். இதுவே, சாலையின் உயரத்தை உயா்த்துவதற்கு காரணம்.

சாலையை உயா்த்துவதால் ஒரு தெருவில் 10 சதவீத வீடுகள் மட்டுமே பாதிக்கப்படுகின்றன. பெரும்பாலான வீடுகள் சாலையை விட இரண்டரை முதல் 3 அடி உயரத்திலேயே உள்ளன. பத்து சதவீத வீடுகளுக்காக சாலையைப் பெயா்த்து புதிய சாலையை அமைத்தால், அதன் தரத்தை உறுதிப்படுத்த முடியாமல் போய்விடுகிறது என்றனா் அலுவலா்கள்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.