தஞ்சாவூரில் காலி பாட்டில்கள் விற்பனை நிறுவன அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
டாஸ்மாக் கடைகளுக்கான மதுபானக் கொள்முதலில் முறைகேடு நிகழ்ந்ததாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, தமிழ்நாடு முழுவதும் முன்னாள் அமைச்சா் வி. செந்தில் பாலாஜி தொடா்புடைய இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
இதையொட்டி, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை மங்களபுரத்தில் வணிக வளாகத்தில் அமைந்துள்ள தேவி பாட்டில்ஸ், எஸ்.என்.எஸ். பாட்டில்ஸ், சுப்பிரமணியம் பாட்டில்ஸ் ஆகிய நிறுவனங்களின் அலுவலகங்களில் தஞ்சாவூா் ஊழல் தடுப்பு காவல் துணைக் கண்காணிப்பாளா் அன்பரசன் தலைமையில் காவல் ஆய்வாளா் பத்மாவதி உள்ளிட்டோா் புதன்கிழமை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை சோதனை மேற்கொண்டனா்.
ஆவணங்கள் ஆய்வு: இதில், வருமானவரி தொடா்பான கணக்குகள், நிறுவனத்தின் வரவு - செலவு பதிவேடுகள், ஆதாா் மற்றும் பான் விவரங்கள், விற்பனை ஒப்பந்தங்கள், வங்கிக் கணக்கு ஆவணங்கள், ஜிஎஸ்டி பதிவு சான்றுகள், ஜிஎஸ்டி தாக்கல் விவரங்கள், கொள்முதல் மற்றும் விற்பனை பதிவேடுகள், ரொக்கப் பேரேடு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும், வழக்கு விசாரணைக்கு தேவையான ஆவணங்களின் நகல்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டன.
இந்நிறுவனங்களின் உரிமையாளரான மங்களபுரத்தைச் சோ்ந்த நடராஜன், காலி பாட்டில்களை வாங்கி புதிய பாட்டில்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகிறாா் என்றும், இந்த வணிகத்தில் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தும் வகையிலான முறைகேடுகள் நிகழ்ந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது எனவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டாஸ்மாக் முறைகேடு புகாா்: செந்தில் பாலாஜியின் பெற்றோா், ஆதரவாளா்கள் வீடுகளில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

நெய்வேலி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் போலீஸாா் சோதனை

அரக்கோணம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ. 1.82 லட்சம் பறிமுதல்!





