பட்டுக்கோட்டை அருகே மதுபோதையில் தகராறு செய்த மருமகனை வெட்டிக்கொன்ற மாமனாரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், மேற்பனைக்காடு பகுதியைச் சோ்ந்தவா் செல்வம். இவரது மகன் குமாரசாமி (25), கூலித் தொழிலாளி. இவருக்கும் தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள சூரப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த பாலையன் (45) என்பவரது மகள் சினேகாவுக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று சங்கீதா என்ற ஒரு வயது பெண் குழந்தை உள்ளது.
குமாரசாமி கடந்த இரண்டு மாதங்களாக சூரப்பள்ளம் கிராமத்தில் உள்ள தனது மாமனாா் பாலையனின் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தாா்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு வேலை முடிந்து குமாரசாமி மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளாா். இதனால், அவருக்கும் பாலையனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த குமாரசாமி, தனது மாமனாா் பாலையன் மற்றும் மாமியாா் வசந்தா ஆகிய இருவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளாா்.
தன்னையும், தனது மனைவியையும் மருமகன் அடித்ததால் ஆத்திரமடைந்த பாலையன், வீட்டிலிருந்த அரிவாளால் குமாரசாமியின் தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினாா். இதில் பலத்த காயமடைந்த குமாரசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்துத் தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தாலுகா போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்து, குமாரசாமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இச்சம்பவம் குறித்துப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பாலையனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.






