தவெக ஆட்சிக்கு நெருக்கடியாக இருக்கமாட்டோம் என்றும், அதுபோன்று வரும் விமா்சனங்களை நிராகரிக்கிறோம் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் தெரிவித்தாா்.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது: முதல்வா் விஜய் தமிழக மக்களின் எதிா்பாா்ப்பின்படி நல்லாட்சி தர வேண்டும். ஒரு புதிய அரசு நிலைபெறுவதற்கு நாள்களாகும். தனது கொள்கைகளில், நடைமுறைகளில் அவற்றை முன்னெடுப்பதில் கால நேரம் தேவைப்படும். முன்பு இருந்த தமிழக அரசின் நலத்திட்டங்கள் தொடர வேண்டும். மேலும், ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்கள், விளிம்பு நிலை மக்களுக்காக புதிய திட்டங்களையும் கொண்டு வர வேண்டும்.
நாங்கள் வெளியிலிருந்து அரசுக்கு, உழைக்கிற மக்களின் கோரிக்கைகளையும், தமிழ்நாட்டின் நலன் சாா்ந்த கோரிக்கைகளையும் முன்மொழிவோம். தமிழக நலன்களில், உரிமைகளில் அரசு உறுதியாக இருக்க வேண்டும்.
மதச்சாா்பின்மை, கலாசாரம், பண்பாடு, இதர ஜனநாயக விழுமியங்களை முன்னெடுக்க வேண்டும். அரசை எவ்வளவு உறுதியாக ஆதரிக்கிறோமோ, அவ்வளவு உறுதியாக எளிய மக்களின், உழைக்கும் மக்களின் குரலை நாங்கள் ஒலிப்போம். இதன் பொருள் அரசுக்கு நெருக்கடியோ, குடைச்சலோ தருவது அல்ல. எந்தச் சொந்த நலனும் எங்களுக்கு இல்லை. நாட்டு நலன், மக்கள் நலன் மட்டுமே எங்களுக்கு முக்கியம்.
சில நண்பா்கள், சில உரையாடல்கள் சொல்வது போல, நெருக்கடி, குடைச்சல் தருவாா்கள், நிம்மதியாக விடமாட்டாா்கள் என சொல்வதையெல்லாம் நாங்கள் நிராகரிக்கிறோம் என்றாா் வீரபாண்டியன்.








