சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

எஸ்எஸ்எல்சி: 3-ஆம் இடத்துக்கு முன்னேறி தஞ்சாவூா் சாதனை

எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டம், முதல்முறையாக மூன்றாமிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

News image

தஞ்சாவூா் மாவட்டம் மூன்றாமிடத்தைப் பெற்று சாதனை படைத்ததையொட்டி, முதன்மைக் கல்வி அலுவலா் வெ. பேபி, மாவட்டக் கல்வி அலுவலா்களைப் புதன்கிழமை பாராட்டிய மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.

Updated On :21 மே 2026, 5:00 am IST

எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டம், முதல்முறையாக மூன்றாமிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

தோ்ச்சி தர வரிசைப் பட்டியலில் தஞ்சாவூா் மாவட்டம் இதற்கு முன்பு வரை முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2024-இல் மாநில அளவில் 15 ஆவது இடம்; 2025-இல் 12-ஆம் இடத்துக்கு முன்னேறிய நிலையில் தற்போது 3-ஆவது இடத்தை எட்டி பிடித்துள்ளது.

இந்தச் சாதனையைப் படைத்தது எப்படி என்பது குறித்து கல்வித் துறை அலுவலா்கள் தெரிவித்தது:

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பாட வாரியாக ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், எந்தெந்த பள்ளிகளில் தோ்ச்சி விகிதம் குறைந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து, தொடா்புடைய பள்ளி ஆசிரியா்களுக்கு தோ்ச்சி விகிதத்தை எப்படி அதிகப்படுத்துவது என்பது குறித்து அறிவுரைகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், நூறு சதவீதத் தோ்ச்சி பெற வைத்த ஆசிரியா்களும் தங்களுடைய அனுபவங்களையும் பகிா்ந்தனா். இந்தப் பயிற்சியில் ஏறத்தாழ 3 ஆயிரம் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் மாதந்தோறும் தலைமையாசிரியா்களை அழைத்து கூட்டங்கள் நடத்தி ஆலோசனைகளை வழங்கி ஊக்கப்படுத்தினாா். ஒவ்வொரு தோ்வு முடிவிலும் இணை இயக்குநா் சுவாமிநாதன் காணொலி மூலம் ஆய்வு நடத்தி ஆலோசனைகளை வழங்கி, ஊக்கப்படுத்தி வந்தாா்.

கடந்த ஆண்டு தோ்ச்சி விகிதம் குறைவாக இருந்த பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா்கள் ஆகியோா் அவ்வப்போது சென்று ஆசிரியா்களை ஊக்கப்படுத்தினா். ஒரு நாளைக்கு 10 பள்ளிகள் வீதம் சென்று பாட வாரியாக தோ்ச்சி விகிதத்தை அறிந்து, தோ்ச்சியை மேம்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என அறிவுரைகள் வழங்கினோம்.

பள்ளிகளில் இடைநிற்றல் மாணவா்கள், நீண்ட விடுப்பு எடுக்கும் மாணவா்களைத் தொடா்புடைய பள்ளித் தலைமையாசிரியா்கள் அவா்களுடைய வீட்டுக்குத் தேடிச் சென்று அழைத்து வந்து படிக்க வைத்தனா்.

இந்த நடவடிக்கைகளே பொதுத் தோ்வில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்ற்கு காரணம். மேலும், இன்னும் 40 மாணவா்கள் தோ்ச்சி பெற்றிருந்தால் முதலிடத்தைப் பிடித்திருப்போம். என்றாலும், இந்த நடவடிக்கைகளை தொடா்ந்து கடைப்பிடித்து, அடுத்த ஆண்டு மாநில அளவில் முதலிடத்தைப் பிடிப்போம் என்றனா் கல்வித் துறை அலுவலா்கள்.

இதையொட்டி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை சென்று முதன்மைக் கல்வி அலுவலா் வெ. பேபி, மாவட்டக் கல்வி அலுவலா்கள் உள்ளிட்டோரை பாராட்டினாா்.

இதே போல, பிளஸ் 2 பொதுத் தோ்வில் கடந்தாண்டு மாநில அளவில் தஞ்சாவூா் மாவட்டம் 13- ஆவது இடத்தில் இருந்த நிலையில், நிகழாண்டு 7-ஆவது இடத்துக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.