கூட்டணி துரோகம் குறித்து காங்கிரஸுக்கு திமுக பாடம் எடுக்க வேண்டியதில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளா் ஏ. நாகூா்கனி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
1998 மக்களவைத் தோ்தலில் திமுக-தமாகா-கம்யூனிஸ்ட் கட்சிகள் ஓரணியாகவும், அதிமுக-பாஜக மற்ற கட்சிகள் இணைந்தும் போட்டியிட்டன.
மத்தியில் அமைந்த மைனாரிட்டி பாஜகவுக்கு கூட்டணி கட்சியான அதிமுக வெளியிலிருந்து ஆதரவு கொடுத்தது. ஓராண்டில் அதிமுக-பாஜக இடையே மனக்கசப்பு ஏற்பட்டு அதிமுக ஆதரவை வாபஸ் வாங்கியது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றபோது, தமாகா-கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணியோடு வென்ற திமுகவின் 5 எம்பிக்கள் பாஜக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனா். அப்போது, தமாகா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரை கேட்காமல் பாஜகவுக்கு திமுக ஆதரவளித்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்று ஆட்சி கவிழ்ந்தது.
ஒரு கூட்டணியோடு வெற்றி பெற்று, பாஜகவுக்கு ஆதரவளித்த திமுகவை போன்றுதான், தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் ஆதரவு அளித்தது.
திமுக செய்தால் தியாகம்; காங்கிரஸ் செய்தால் துரோகமா. சுயநலம் எண்ணம் கொண்ட கட்சிதான் திமுக. துரோகம் குறித்து காங்கிரஸுக்கு பாடம் பாடம் எடுக்க வேண்டியதில்லை.
பாஜக ஆட்சி கவிழ்ந்த பிறகு, கூட்டணியில் இருந்த தமாகாவையும்,கம்யூனிஸ்ட் கட்சிகளையும் விட்டுவிட்டு, 1999-இல் மக்களவைத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி சோ்ந்து வெற்றி பெற்று பாஜக அமைச்சரவையில் திமுக பங்கேற்றது. சந்தா்ப்பவாத கட்சியான திமுக, காங்கிரஸை துரோகி என கூறக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளாா்.









