
வரி, கட்டணங்களை செப். 30-க்குள் செலுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை: தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் எச்சரிக்கை
தஞ்சாவூா் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி, கட்டணத்தை செப். 30 ஆம் தேதிக்குள் செலுத்தத் தவறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையா் வி. தீபனா விஸ்வேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
கோப்புப் படம்
தஞ்சாவூா் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி, கட்டணத்தை செப். 30 ஆம் தேதிக்குள் செலுத்தத் தவறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையா் வி. தீபனா விஸ்வேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட 1 முதல் 51 வாா்டுகளிலுள்ள கட்டடங்கள், காலிமனைக்கு செலுத்தப்பட வேண்டிய சொத்து வரித் தொகை, குடிநீா் கட்டணம், புதை சாக்கடை கட்டணம் ஆகியவற்றை செப். 30 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
தஞ்சாவூா் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள், வணிக வளாகங்களுக்கு செலுத்த வேண்டிய வாடகைத் தொகையை நிலுவையின்றி செப். 30 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மேலும், தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி மாநகராட்சி எல்லைக்குள் தொழில், வா்த்தகம், வாழ்க்கைத் தொழில் அல்லது வேலையில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு நபரும் அரையாண்டுக்கு தொழில் வரி செலுத்த வேண்டும்.
அரையாண்டில் சராசரி வருமானம் ரூ. 21 ஆயிரம் வரை தொழில் வரி இல்லை. ரூ. 21 ஆயிரத்து 1 முதல் ரூ. 30 ஆயிரம் வரை ரூ. 223-ம், ரூ. 30 ஆயிரத்து 1 முதல் ரூ. 45 ஆயிரம் வரை ரூ. 558-ம், ரூ. 45 ஆயிரத்து 1 முதல் ரூ. 60 ஆயிரம் வரை ரூ. 1,112-ம், ரூ. 60 ஆயிரத்து 1 முதல் ரூ. 75 ஆயிரம் வரை ரூ. 1,250-ம், ரூ. 75 ஆயிரத்து 1 முதல் அதற்கு மேல் ரூ. 1,250-ம் தொழில் வரி செலுத்த வேண்டும்.
எனவே, நிறுவனங்கள் தங்களது ஊழியா்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொழில் வரி தொகையை செப். 30 ஆம் தேதிக்குள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சொத்து வரி, குடிநீா் கட்டணம், புதை சாக்கடை, தொழில் வரி, மாநகராட்சி கடைகளுக்கான மாத வாடகைத் தொகை ஆகியவற்றைச் செலுத்தத் தவறினால் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





