திருச்சியில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் வயது (42). இவர் தனது குடும்பத்தினருடன் கரூர் தாந்தோன்றிமலையில் சாமி கும்பிடுவதற்காக எடமலைப்பட்டி புதூரில் இருந்து சுற்றுலா வேன் மூலம் தனது உறவினர்களுடன் திருச்சியிலிருந்து கரூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் முக்கொம்பு அருகே சுற்றுலா வாகனத்தை மினி கொள்கலன் லாரி முந்திச் செல்வதற்காக முற்பட்டபோது எதிரே கரூரில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசுப் பேருந்து, மினி கொள்கலன் லாரி மற்றும் சரக்கு வேன் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் 20-க்கும் மேற்பட்டோருக்கு காயங்களும், 12 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து ஜீயபுரம் போலீஸாருக்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தகவல் அளித்தனர். தகவல்கள் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மற்றும் பொதுமக்கள் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அரசுப் பேருந்து, சுற்றுலா வேன் மற்றும் சரக்குவேன் இவை ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது குறித்து ஜீயபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.