/

திருச்சியில் ரூ.20 கோடிக்கு கிராவல் மண் நிரப்பும் பணி: அமைச்சர் தொடக்கி வைத்தார்

திருச்சி மாநகராட்சியில், ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகளில் வாகனங்கள் வழங்கும் விழாவினை தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு புதன்கிழமை தொடக்கி வைத்தார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:43 am

DIN

திருச்சி: திருச்சி மாநகராட்சியில், ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகளில் ரூ. 20 கோடிக்கு கிராவல் மண் நிரப்பும் பணிகள், மற்றும் ரூ. 3.90 கோடியில் வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் வழங்குதல் உள்ளிட்டவைகளை, தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு புதன்கிழமை தொடக்கி வைத்தார்.

திருச்சி மாநகராட்சியில், மதுரை தேசிய நெடுஞ்சாலை பஞ்சப்பூர் பகுதியில்,  புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. முனையம் அமைக்கும் பணிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்தார்.  கனரக சரக்கு வாகனம் முனையம், பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிக்கான மையம், பிரத்யேக மற்றும் உள்புற சாலைகள், மழை நீர் வடிகால் வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ. 349.98 கோடி திட்டமதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஆசிய அளவில் பெரியதாக அமைக்கப்படவுள்ளன.  

Story image

இதனையடுத்து பூர்வாங்கப் பணிகள் நடைபெற்ற வந்த நிலையில், பணிகளுக்காக முதல் கட்ட நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பேருந்து நிலைய முனையம் அமைக்கும் வளாகத்தில் ரூ. 20.10 கோடியில் (கிராவல்) மண் அடித்து மேடாக உயர்த்த முடிவு செய்யப்பட்டிருந்தது. அப்பணிகளை அமைச்சர் கே.என். நேரு, புதன்கிழமை காலை தொடங்கி வைத்தார். இதற்கென சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டு மண் நிரப்பும் பணிகள் தொடங்கின. 

சுமார் 70 ஏக்கர் பரப்பளவுள்ள பகுதியில், 30 டிப்பர் லாரிகள் மூலம் நிரப்பப்படும் மண்ணை  5 ஜெசிபி இயந்திரங்கள் மற்றும் 2 பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், திடக்கழிவு மேலாண்மைப் பணிகளில் பயன்படுத்தும் வகையில் (தலா ரூ.25 லட்சம்) ரூ.1.95 கோடி மதிப்பில் (பேட்டரியில் இயங்கும்) 88 குப்பை அள்ளும் வாகனங்கள்,  தலா ரூ.25 லட்சம் மதிப்பில் ரூ.75 லட்சத்தில் 3 ஜேசிபி இயந்திரங்கள்  (தலா ரூ. 15 லட்சத்தில் ), ரூ.1.20 கோடியில், புதைவடிகால் தொட்டிகளில் (மேன்ஹோல்) மண் துகள்களை அகற்றும் இயந்திரங்கள் (8), என மொத்தம் ரூ. 3.90 கோடி மதிப்பில் 99 வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை வழங்கி அவற்றி இயக்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் ஆர். வைத்தியநாதன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் வைரமணி, ஒன்றிய செயலாளர் மாத்தூர் கருப்பையா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.