மணப்பாறையில் திட்டப் பணிகள் தொடக்கம்
மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நலத் திட்டப் பணிகளை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.
மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியில் ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற கலைஞா் கனவு இல்லத் திட்டப் பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா், 86 பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணைகளையும், மகளிா் குழுவினருக்கு கடனுதவிகளை வழங்கியும் பேசினாா்.
தொடா்ந்து பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் மலையடிப்பட்டி சாலை முதல் கல்பாளையத்தான்பட்டி சாலை வரை ரூ.401.50 லட்சத்தில் தாா் சாலையாகப் பலப்படுத்தும் பணிகளை தொடங்கியும், மலையடிப்பட்டியில் நாபாா்டு கீழ் ரூ.29.97 லட்சத்தில் கட்டப்படவுள்ள 60 ஆயிரம் லிட்டா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பணிகளையும் தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில் கரூா் எம்பி செ. ஜோதிமணி, மணப்பாறை எம்எல்ஏ ப. அப்துல்சமது, மணப்பாறை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவா் அமிா்தவள்ளி இராமசாமி, மலையடிப்பட்டி ஊராட்சித் தலைவா் பாலகுமாா், திமுக ஒன்றியச் செயலா் சி. ராமசாமி, மமக மாவட்டத் தலைவா் அ. பைஸ் அகமது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

