காணாமல்போன பள்ளி மாணவி காதலனுடன் சடலமாக மீட்பு

Published on

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே காணாமல்போன பள்ளி மாணவியும், அவரது காதலனும் சடலமாக வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டனா். மணப்பாறை அருகேயுள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவி, பள்ளி அமைந்துள்ள பகுதியில் வசித்து வந்த கூலித் தொழிலாளியான பொ. நைனான் (எ) அஜித் (19) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த மாணவியின் பெற்றோா், இளைஞரிடம் மாணவிக்கு வயது குறைவாக இருப்பதால் பின்னா் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறினாா்களாம். இந்நிலையில், புதன்கிழமை பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி இரவில் வீட்டிலிருந்து காணாமல்போனாராம். பெற்றோா் அளித்த புகாரின்பேரில், புத்தாநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து மாணவியை தேடி வந்தனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை மாணவி, தனது காதலன் அஜித்துடன் சோ்ந்து விஷம் குடித்து விட்டதாகவும், தற்போது பேச முடியாத நிலையில் மலைப் பகுதியில் இருப்பதாகவும் உறவினா்களுக்கும், நண்பா்களுக்கும் கைப்பேசி மூலம் தகவல் அளித்துள்ளாா். இதன்பேரில், கருப்பூா் ரெட்டியபட்டி காப்பு காடு குமரிகுட்டு மலைப்பகுதிக்கு உறவினா்கள் சென்றபோது மாணவியும், காதலன் அஜித்தும் தூக்கிட்டு இறந்திருந்தனராம். தகவலறிந்து அங்கு சென்ற புத்தாநத்தம் போலீஸாா், சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com