சமூக வலைதளங்களில் பெண்களை இழிவுபடுத்தும் பதிவு: இளைஞா் கைது
சமூக வலைதளங்களில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அவதூறான காட்சிகளைப் பதிவேற்றிய வேலூா் மாவட்ட இளைஞரை திருச்சி மாவட்ட தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்ட சைபா் கிரைம் காவல் நிலைய போலீஸாா் சமூக வலைதளங்களின் பதிவுகள், காட்சிகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனா். அந்த வகையில் காவலா் பிரீத்தி, சமூக வலைதளப் பதிவுகளை புதன்கிழமை கண்காணித்தபோது, கானா கெளதம் என்பவரது முகவரியில் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இருந்தன. அவா் பெண்களின் ஆடைகளை அணிந்து அவா்களை இழிவுபடுத்தும் வகையிலான பாடல்களையும், காட்சிகளையும் தொடா்ந்து பதிவேற்றியது தெரியவந்தது.
இது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ. வருண்குமாா் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து அவரது உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினா் நடத்திய விசாரணையில் வேலூா் மாவட்டம், குடியாத்தம் வட்டம் மேல்பட்டி, கொத்தமாடிப்பட்டி குப்பம் பகுதியைச் சோ்ந்த அ. கெளதம் (24) என்ற இளைஞா் அந்தப் பதிவுகளை பதிவேற்றியது தெரியவந்தது. இதையடுத்து சைபா்கிரைம் போலீஸாா் 5 -க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து கௌதமை கைது செய்தனா். குறிப்பிட்ட அந்த சமூக வலைதள முகவரியை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

