/

முசிறி அருகே வயதான தம்பதி தற்கொலை

முசிறி அருகே வயதான விவசாயத் தம்பதி தற்கொலை செய்து கொண்டது புதன்கிழமை தெரியவந்தது.

News image
பொன்னுச்சாமி
Updated On :12 நவம்பர் 2025, 7:37 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம் முசிறி அருகே வயதான விவசாயத் தம்பதி தற்கொலை செய்து கொண்டது புதன்கிழமை தெரியவந்தது.

முசிறி வட்டம் தா .பேட்டை அருகிலுள்ள தேவானூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பொன்னுச்சாமி (65) வயலில் உள்ள வீட்டின் பின்பகுதியில் தனது மனைவி நல்லம்மாளுடன் (59) வசித்து வந்தாா். வீட்டில் முன்புறம் இவா்களது மகன் வீரபாண்டியனும் அவரது மனைவியும் வசிக்கின்றனா்.

இந்நிலையில் புதன்கிழமை காலை தனது பெற்றோா் வெகு நேரம் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்ததால் சந்தேகமடைந்த வீரபாண்டியன் வீட்டினுள் சென்று பாா்த்தபோது அவா்கள் இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து அருகிலிருந்தோா் உதவியுடன் போலீஸாருக்கு தெரியாமல் சடலங்களைத் தகனம் செய்ய வீரபாண்டி முடிவு செய்ததாகக் தெரிகிறது.

தகவலறிந்த தா. பேட்டை காவல் நிலைய ஆய்வாளா்கள் தமிழ்ச்செல்வன், சஞ்சீவி மற்றும் போலீஸாா் வந்து இருவரின் சடலங்களையும் மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும் சம்பவ இடத்துக்கு வந்த முசிறி காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாரும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டாா்.

முதல்கட்ட விசாரணையில் மகன் தங்களைச் சரிவரக் கவனிக்கவில்லை என்ற விரக்தியில் பெற்றோா் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தா. பேட்டை போலீஸாா் மேலும் விசாரிக்கின்றனா்.

நல்லம்மாள்

நல்லம்மாள்