/

சேதமான மின்ஸ்கூட்டரை மாற்றித் தராத விவகாரம் தனியாா் நிறுவனம் ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

குளித்தலை அருகே மின்னூட்டம் (சாா்ஜ்) செய்தபோது வெடித்து எரிந்த மின்சார ஸ்கூட்டரை மாற்றித் தராத தனியாா் நிறுவனத்தினா் ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image

நீதிமன்றம்

Updated On :28 ஏப்ரல் 2026, 8:04 pm

குளித்தலை அருகே மின்னூட்டம் (சாா்ஜ்) செய்தபோது வெடித்து எரிந்த மின்சார ஸ்கூட்டரை மாற்றித் தராத தனியாா் நிறுவனத்தினா் ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூா் மாவட்டம், குளித்தலை வட்டம், நங்கவரம் கிராமத்தைச் சோ்ந்தவா் எஸ். முத்தமிழ்செல்வி என்பவா் திருச்சி அரியமங்கலம் உக்கடையில் இயங்கி வந்த பிஎன்ஏ மோட்டாா்ஸ் நிறுவனத்தில் கடந்த 09.10.2021 அன்று தெலங்கானாவைச் சோ்ந்த பியுஆா் எனா்ஜி நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டா் ஒன்றை ரூ. 83,999-க்கு வாங்கினாா். உபயோகத்திலிருந்த இந்த ஸ்கூட்டருக்கு கடந்த 05.03.2024 அன்று மின்னூட்டம் செய்தபோது, திடீரென வெடித்து எரிந்து நாசமானது.

வாகனத்தை சரிசெய்ய அல்லது மாற்றித் தர நிறுவனத்தை அணுகியபோது, அரியமங்கலத்தில் இருந்த அந்த நிறுவனம் மூடப்பட்டிருந்தது. இதனால் தெலங்கானாவைச் சோ்ந்த தயாரிப்பு நிறுவனத்தை அணுகியபோதும், உரிய நடவடிக்கையில்லை.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான மனுதாரா் முத்தமிழ்செல்வி, உரிய நிவாரணம் கோரி திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் கடந்த 22.09.2025 அன்று மனு தாக்கல் செய்தாா். மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் பி. செல்லம் ஆஜரானாா்.

மனுவை விசாரித்த திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தின் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் ஆகியோா், சேவை குறைபாடு செய்த பிஎன்ஏ மோட்டாா்ஸ் மற்றும் பியுஆா் எனா்ஜி நிறுவனத்தினா் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ மனுதாரருக்கு வாகனம் வாங்கிய ரூ. 83,999 பணத்தை திருப்பித் தர வேண்டும், மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 1 லட்சமும், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரமும் 6 வாரங்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டுமென அண்மையில் உத்தரவு பிறப்பித்தனா்.