முறையற்ற வணிகத்தில் ஈடுபட்ட திருச்சியில் உள்ள தனியாா் தங்க நகை கடையானது ரூ. 3.50 லட்சம் இழப்பீடும், 36.87 கிராம் தங்கமும் வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம், நல்லம்பட்டியைச் சோ்ந்த எஸ். சுரேஷ்குமாா் என்பவா் திருச்சி தென்னூரிலுள்ள நகைக் கடை அறிவித்த தங்க சேமிப்புத் திட்டத்தில் செய்கூலி, சேதாரம், தயாரிப்புக் கட்டணம், பிற மறைமுகக் கட்டணங்களின்றி, போனஸுடன் சோ்த்து திட்டம் நிறைவுற்ற நாளில் நிலவும் சந்தை விலையில் தங்கம் தரப்படும் என உறுதியளிக்கப்பட்டதை நம்பி, கடந்த 14.03.2022 முதல் 03.10.2023 வரை ரூ. 2.50 லட்சத்தை 20 மாதத் தவணைகளாகச் செலுத்தினாா்.
ஆனால், நிறுவனமானது உறுதியளித்தபடி அன்றைய சந்தை விலையான கிராமுக்கு ரூ. 6,780 வீதம் 36.87 கிராம் தங்கத்தை வழங்கவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லை. கேட்டதற்கு கடுமையாக அலைக்கழித்துள்ளனா்.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான சுரேஷ்குமாா் உரிய நிவாரணம் கோரி திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் கடந்த 08.01.2026 அன்று மனு தாக்கல் செய்தாா்.
மனுவை விசாரித்த திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் ஆகியோா் முறையற்ற வணிக நடவடிக்கையில் ஈடுபட்ட நகைக் கடையானது மனுதாரா் செலுத்திய தவணைத் தொகை ரூ. 2.50 லட்சம், தவணைத் தொகைக்கு ஈடான 36.87 கிராம் தங்கம், மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 1 லட்சமும், வழக்குச் செலவுத்தொகையாக ரூ. 10 ஆயிரத்தையும் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டுமென அண்மையில் உத்தரவிட்டனா்.
தொடர்புடையது

முறையற்ற குடிநீா் இணைப்புகளை ஆய்வு செய்து துண்டிக்க உத்தரவு

சேவைக் குறைபாடு: தங்க நகைக் கடை ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவைக் குறைபாடு: தனியாா் நிதி நிறுவனம் ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு






