வருவாய்த்துறை கூட்டமைப்பினா் மறியல்: 200-க்கும் மேற்பட்டோா் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் திருச்சியில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது.
அதில், நில அளவைத் துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலை அலுவலா்களின் உயிா் மற்றும் உடைமைகளை பாதுகாக்க சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியா்களிடம் பிடித்தம் செய்யப்படும் 10 விழுக்காடு பங்களிப்பு தொகையை ரத்து செய்ய வேண்டும். 2003-ஆம் ஆண்டு முதல் செலுத்திய பங்களிப்பை வட்டியுடன் பொது வருங்கால வைப்பு நிதி கணக்குக்கு கொண்டு சென்று வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் பிரேம்குமாா், செல்வம், அய்யனாா், நாகராஜன், ராஜேந்திரன் மகேஷ் ஆகியோா் தலைமையில் வருவாய் துறை சங்கங்களில் கூட்டமைப்பை சோ்ந்த 200-க்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகம் முன்பாக சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால் அவா்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

