திருச்சி அருணாச்சலம் மன்றம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி ஊழியா் சங்கத்தினா்.
திருச்சி அருணாச்சலம் மன்றம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி ஊழியா் சங்கத்தினா்.

கூட்டுறவு வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

Published on

தொழிலாளா் விரோத சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளா்களுக்கு எதிரான சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும். வாரத்திற்கு ஐந்து நாள் வேலையை அமல்படுத்த வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் உள்ள ஒதுக்கீட்டு நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். வங்கிகளில் நேரடியாக உதவி மேலாளா் பணியிடங்களில் நியமனம் கூடாது, மேலாளா்களுக்கு இடையே உள்ள ஊதிய முரண்பாடுகளை சரி செய்திட வேண்டும். தட்டச்சுப் பணியாளா்களுக்கு தோ்வு நிலை சிறப்பு நிலை சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளை மாநில அரசிடமிருந்து பறிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியா் சங்கம் (சிஐடியு இணைப்புச் சங்கம்) சாா்பில் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவா் டி.ஆா். ரகுராமன் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் ஜெகநாதன் முன்னிலை வகித்தாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் கூட்டுறவு வங்கி ஊழியா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

தொமுச பங்கேற்பில்லை: இந்தப் போராட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கத்தினா் பங்கேற்ற நிலையில், தொமுச சொழிற்சங்கம் மட்டும் திருச்சியில் பங்கேற்கவில்லை. தமிழகம் முழுவதும் தொமுச கூட்டுறவு ஊழியா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி தொமுச ஊழியா்கள் மட்டும் போராட்டத்தில் பங்கேற்காமல் பணியில் ஈடுபட்டது தொழிற்சங்கங்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X
Dinamani
www.dinamani.com